அன்பளிப்புகள் பற்றிய உரை

அன்பளிப்புகள் பற்றிய உரை


Dakkhiṇāvibhaṅga Sutta
dakkhiṇā - தட்சிணை, அன்பளிப்பு
vibhaṅga - வியாக்கியானம், உரை

மஜ்ஜிம நிகாயம் MN142
Source: The Middle Length Discourses of the Buddha. A translation of the Majjhima Nikāya
by Bhikku Ñanamoli and Bhikku Bodhi - Wisdom Publications


மகாபஜாபதி கோதமி தரும் அன்பளிப்பை புத்தர் ஏற்க மறுப்பு

  இவ்வாறு நான் கேள்வியுற்றேன். ஒரு சமயம் பகவர் சாக்கியர் நாட்டின் கப்பிலவத்துவில் உள்ள நிக்ரோதரின் விகாரையில் எழுந்தருளியிருந்தார்.

  அப்போது மகாபஜாபதி கோதமி [1] இரண்டு புதிய துணிகளோடு பகவரிடம் சென்றார். அவரை வணங்கியபிறகு ஒரு புறமாக அமர்ந்து பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா, இந்த இரண்டு புதிய துணிகளை நான் பகவருக்காகவே இழைத்து, நெய்துள்ளேன். பகவர் கருணையோடு இதனை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாராக," [2] என்று கேட்டுக் கொண்டார்.

  இதை கேட்ட பகவர் அவரிடம் "இதை சங்கத்துக்குத் தரவும், கோதமியாரே. சங்கத்துக்குத் தரும்போது நானும் சங்கத்தாரும் கௌரவிக்கப்படுவோம்."

  இரண்டாவது முறை, மூன்றாவது முறை கோதமி பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா........ இதனை கருணையோடு என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாராக." என்று கேட்டுக் கொண்டார்.

  இரண்டாவது முறை, மூன்றாவது முறை பகவர் அவரிடம் "இதை சங்கத்துக்குத் தரவும், கோதமியாரே. சங்கத்துக்குத் தரும்போது நானும் சங்கத்தாரும் கௌரவிக்கப்படுவோம்," என்றார்.

  பின் போற்றுதற்குரிய ஆனந்தர் பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா, பகவர் இந்த இரண்டு புதிய துணிகளை மகாபஜாபதி கோதமியாரிடமிருந்து பெற்றுக் கொள்வாராக. மகாபஜாபதி கோதமி உங்களுக்கு மிகவும் உதவி செய்துள்ளார். உங்கள் தாயாரின் சகோதரி. உங்கள் தாயார் இறந்த பின்பு, உங்களுக்குப் பாலூட்டி வளர்த்த செவிலித் தாயார் அவர்.

  பகவரும் மகாபஜாபதி கோதமியாருக்கு பெரும் உதவி செய்துள்ளீர்கள். பகவரின் காரணமாக மகாபஜாபதி கோதமியார் புத்த, தன்ம, சங்கத்திடம் அடைக்கலம் சென்றுள்ளார்.
  பகவரின் காரணமாக மகாபஜாபதி கோதமியார் எந்த உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்கின்றார், பிறர் பொருளை களவு செய்வதைத் தவிர்க்கின்றார், தவறான பாலியல் உறவுகளைத் தவிர்க்கின்றார், தவறான பேச்சு உரைப்பதைத் தவிர்க்கின்றார், விவேகத்தை கெடுக்கும் போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்க்கின்றார்.
  பகவரின் காரணமாக மகாபஜாபதி கோதமியார் புத்த, தன்ம, சங்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், சான்றோர் புகழும் நன் நடத்தையும் கொண்டுள்ளார். [3]
  பகவரின் காரணமாக மகாபஜாபதி கோதமியாருக்கு துக்கத்தைப் பற்றியும், துக்கம் தோன்றுவதற்கான காரணத்தின் மீதும், துக்கத்தின் முடிவு பற்றியும், துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கத்தின் மீதும் எந்த சந்தேகமும் இல்லை.
  புத்தர் மகாபஜாபதி கோதமியாருக்கு பெரும் உதவி செய்துள்ளார்."

  "உண்மைதான், ஆனந்தா, உண்மைதான்!

  ஒருவர் இன்னொருவரின் காரணமாக புத்த, தன்ம, சங்கத்திடம் அடைக்கலம் சென்றிருந்தால் முதலானவர் உதவியவரை வணங்கி, அவர் வரும்போது மரியாதையின் காரணமாக நின்று, உபசரித்து, அவருக்கு பணிவிடைகள் செய்து, துணிமணிகளும், உணவும், களைப்பாற இடமும், வேண்டிய மருந்துகளும் தந்து செய்ந்நன்றி கடன் கழிப்பது [4] என்பது சுலபமானதள்ள, என்கிறேன்.

  ஒருவர் இன்னொருவரின் காரணமாக எந்த உயிரையும் கொல்லுதலையும், பிறர் பொருளை களவு செய்வதையும், தவறான பாலியல் உறவுகளையும், தவறான பேச்சு உரைப்பதையும், விவேகத்தை கெடுக்கும் போதையளிக்கும் பொருளை உட்கொள்ளுதலையும் தவிர்ப்பாரானால்... உதவியவருக்கு வணங்கி....வேண்டிய மருந்துகளும் தந்து செய்ந்நன்றி கடன் கழிப்பது என்பது சுலபமானதள்ள, என்கிறேன்.
  ஒருவர் இன்னொருவரின் காரணமாக புத்த, தன்ம, சங்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், சான்றோர் புகழும் நன் நடத்தையும் கொண்டிருப்பாரானால்
... உதவியவருக்கு வணங்கி.... வேண்டிய மருந்துகளும் தந்து செய்ந்நன்றி கடன் கழிப்பது என்பது சுலபமானதள்ள, என்கிறேன்.
  ஒருவர் இன்னொருவரின் காரணமாக துக்கத்தைப் பற்றியும், துக்கம் தோன்றுவதற்கான காரணத்தின் மீதும், துக்கத்தின் முடிவு பற்றியும், துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கத்தின் மீதும் எந்த சந்தேகமும் இல்லாமல் இருப்பாரானால் ... உதவியவருக்கு வணங்கி.... வேண்டிய மருந்துகளும் தந்து செய்ந்நன்றி கடன் கழிப்பது என்பது சுலபமானதள்ள, என்கிறேன்.

பதினான்கு வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்புகள்

  "ஆனந்தா, பதினான்கு வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்புகள் உள்ளன.
  ஒருவர் தேர்ந்த, முழுமையாக ஞானம் பெற்ற தத்தாகதருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே முதல் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் பச்சேக்க புக்தருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே இரண்டாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் தத்தாகதரின் அருக சீடருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே மூன்றாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் அருகர் நிலையின் பலன் கிடைக்க பயிற்சி செய்பவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே நான்காம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் மூன்றாம் ஞான நிலை அடைந்தவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே ஐந்தாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் மூன்றாம் ஞான நிலையின் பலன் கிடைக்க பயிற்சி செய்பவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே ஆறாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் இரண்டாம் ஞான நிலை அடைந்தவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே ஏழாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் இரண்டாம் ஞான நிலையின் பலன் கிடைக்க பயிற்சி செய்பவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே எட்டாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் முதல் ஞான நிலை அடைந்தவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே ஒன்பதாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் முதல் ஞான நிலையின் பலன் கிடைக்க பயிற்சி செய்பவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே பத்தாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் புலன் இன்பங்களிலிருந்து விடுதலை பெற்ற பௌத்த நெறியை பின்பற்றாதொருவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே பதினோராம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கும் சாதாரண ஒருவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே பன்னிரண்டாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் ஒழுக்கங்களை கடைப்பிடிக்காத சாதாரண ஒருவருக்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே பதிமூன்றாம் வகையான தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பு.
  ஒருவர் ஒரு விலங்கிற்கு அன்பளிப்பு தருகிறார். இதுவே பதிநான்காம் வகையான தனிப்பட்டதற்குத் தரும் அன்பளிப்பு.

தனியொருவருக்குத் தரும் அன்பளிப்பின் விளைவுகள்

  "ஆனந்தா, மேல் சொல்லப்பட்டவர்களுக்கு தரப்படும் அன்பளிப்புகளின் விளைவுகள் கீழ் வருமாறு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
  ஒரு விலங்கிற்கு தரப்படும் அன்பளிப்பு நூறு மடங்கு விளைவுகள் தரும். [5] ஒரு ஒழுக்கமற்ற சாதாரண மனிதனுக்கு தரும் அன்பளிப்பு ஆயிரம் மடங்கு விளைவுகள் தரும். ஒரு ஒழுக்கமுள்ள சாதாரண மனிதனுக்கு தரப்படும் அன்பளிப்பு நூறாயிரம் மடங்கு விளைவுகள் தரும். பௌத்த நெறியை பின்பற்றாத ஆனால் புலன் இன்பங்களிளிருந்து விடுதலை பெற்ற ஒருவருக்கு தரப்படும் அன்பளிப்பு ஆயிரம் கோடி விளைவுகள் தரும். முதல் ஞான நிலையை அடைவதற்கு பயிற்சி செய்யும் ஒருவர் தரும் அன்பளிப்பு கணக்கில்லா விளைவுகள் தரும். அப்படி என்றால், முதல் ஞான நிலையை அடைந்தவர், இரண்டாம் ஞான நிலை அடைவதற்கு பயிற்சி செய்பவர், இரண்டாம் ஞான நிலை அடைந்தவர், மூன்றாம் ஞான நிலையை அடைவதற்கு பயிற்சி செய்பவர், மூன்றாம் ஞான நிலையை அடைந்தவர், அருகராக பயிற்சி செய்பவர், அருகரானவர், பச்சேக்க புக்தர் ஆகியவர்களுக்கு தரும் அன்பளிப்பின் விளைவுகளை எவ்வாறு விவரிப்பது? அதைவிட தேர்ந்த, முழுமையாக ஞானம் பெற்ற தத்தாகதருக்கு தரும் அன்பளிப்பின் பலனைப் பற்றி எப்படிச் சொல்வது?" [6]

சங்கத்திற்கு தரும் ஏழு அன்பளிப்புகள்

  "சங்கத்திற்கு தரும் அன்பளிப்புகள் ஏழு வகைப்படும், ஆனந்தா."

  "பிக்குணிமார்களும், பிக்குகளும் கொண்ட புத்தரின் தலைமையில் உள்ள சங்கத்திற்கு அன்பளிப்பு தருவது. [7] இதுவே சங்கத்திற்கு தரும் முதல் வகையான அன்பளிப்பு.
  பிக்குணிமார்களும், பிக்குகளும் கொண்ட சங்கத்திற்கு தத்தாகதர் பரிநிப்பானம் அடைந்த பிறகு அன்பளிப்பு தருவது. இதுவே சங்கத்திற்கு தரும் இரண்டாம் வகையான அன்பளிப்பு.
  பிக்குகள் கொண்ட சங்கத்திற்கு அன்பளிப்பு தருவது. இதுவே சங்கத்திற்கு தரும் மூன்றாம் வகையான அன்பளிப்பு.
  பிக்குணிகள் கொண்ட சங்கத்திற்கு அன்பளிப்பு தருவது. இதுவே சங்கத்திற்கு தரும் நான்காம் வகையான அன்பளிப்பு.
  இவ்வாறு வேண்டியவாறு அன்பளிப்பு தருவது: 'சங்கத்திலிருந்து இத்துணை பிக்குணிமார்களும், பிக்குகளும் எனக்கு நியமிக்க வேண்டும்'; இதுவே சங்கத்திற்கு தரும் ஐந்தாம் வகையான அன்பளிப்பு.
  இவ்வாறு வேண்டியவாறு அன்பளிப்பு தருவது: 'சங்கத்திலிருந்து இத்துணை பிக்குகளை எனக்கு நியமிக்க வேண்டும்'; இதுவே சங்கத்திற்கு தரும் ஆறாம் வகையான அன்பளிப்பு.
  இவ்வாறு வேண்டியவாறு அன்பளிப்பு தருவது: 'சங்கத்திலிருந்து இத்துணை பிக்குணிமார்களை எனக்கு நியமிக்க வேண்டும்'; இதுவே சங்கத்திற்கு தரும் ஏழாம் வகையான அன்பளிப்பு."

"எதிர்காலங்களில், ஆனந்தா, மஞ்சள் துணியை கழுத்தில் கட்டிக்கொண்டு, [8] ஒழுக்கமற்ற, தீய குணமுடைய இனத்தார் இருப்பார்கள். சங்கத்தின் பெயரில் இந்த ஒழுக்கமற்றவருக்கு மக்கள் அன்பளிப்பு தருவார்கள். அச்சமயங்களில் கூட சங்கத்திற்கு தரும் அன்பளிப்பு கணக்கிட முடியாது, அளவிட முடியாது என்கிறேன். தனி ஒருவருக்கு தரும் அன்பளிப்பு ஒரு பொழுதும் சங்கத்திற்கு [9] தரும் அன்பளிப்பை விட அதிக நல் விளைவுகள் கொண்டதாக இருக்காது."

நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பை தூய்மைப்படுத்துவது

  "ஆனந்தா, நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பை தூய்மைப்படுத்தலாம். எந்த நான்கு?

  தருபவரால் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. பெறுபவரால் அல்ல. - தருபவர் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர். பெறுபவர் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர்.

  பெறுபவரால் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. தருபவரால் அல்ல. - தருபவர் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர். பெறுபவர் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர்.

  தருபவர், பெறுபவர் இருவராலும் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படாமல் போகிறது. - தருபவர், பெருபவர் இருவரும் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர்.

  ஒரு அன்பளிப்பு தருபவராலும், பெறுபவராலும் தூய்மைப்படுத்தப்படுகிறது. தருபவர், பெருபவர் இருவரும் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர்."

 இந்த நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது.

 மேலும் அந்த கருணை உடைய புத்த பகவான் சொன்னது:

  "ஒழுக்கமுடைய ஒருவர், இனிய மனதோடு, நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக, ஒழுக்கம் இல்லாதோருக்கு தரும்போது அந்த அன்பளிப்பு தருபவரால் தூய்மைப்படுத்தப்படுகிறது.

  ஒழுக்கம் இல்லாத ஒருவர், வெறுப்பான மனதோடு, தவறான முறையில் பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை இல்லாதவராக ஒழுக்கம் உடையவருக்கு தரும்போது அந்த அன்பளிப்பு பெறுபவரால் தூய்மைப்படுத்துகிறது.

  ஒழுக்கம் இல்லாத ஒருவர், வெறுப்பான மனதோடு, தவறான முறையில் பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை இல்லாதவராக, ஒழுக்கம் கெட்டவருக்கு தரும்போது அந்த அன்பளிப்பில் அதிகம் பயனில்லை என்கிறேன்.

  ஒழுக்கமுடைய ஒருவர், இனிய மனதோடு நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக, ஒழுக்கம் உடையவருக்கு தரும்போது அந்த அன்பளிப்பு தருபவர், பெறுபவர் இருவராலும் தூய்மைப்படுத்துகிறது."

  இனிய மனதோடு, நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக, ஆசையை துறந்த ஒருவர், ஆசையை துறந்த மற்றவருக்கு தரும்போது, அதுவே பொருள் தானத்தில் சாலச் சிறந்தது."

ஃஃஃ

குறிப்புகள்:

[1] மகாபஜாபதி கோதமி. இவர் புத்தரின் தாயாரான ராணி மகாமாயாரின் தங்கை. இவரும் ராஜா சுத்தோதனரின் மனைவி. மகாமாயாரின் மறைவுக்குப் பின் புத்தரின் வளர்புத் தாயாரானார்.

[2] புத்தர் அவரிடம் சங்கத்திற்கு அன்பளிப்பை தர வேண்டும் என்று சொன்ன காரணம், சங்கத்துக்கும் தனக்கும் தரும் நோக்கத்தோடு ஒரு அன்பளிப்பு தரப்பட்டால் அது அவரது நீண்ட நாள் நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் ஏதுவாக இருக்கும் என்பதால். மேலும் எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளும் சங்கத்திற்கு மரியாதை தருவார்கள், அதன் காரணமாக சங்கம் நீடித்திருக்கும் என்பதால்.

[3] இவை முதல் ஞான நிலை அடைவதற்கான நான்கு அம்சங்கள் என்பதால் மகாபஜாபதி கோதமி இச்சமயத்தில் முதல் ஞான நிலை அடைந்துவிட்டார் என்பது தெளிவாகிறது.

[4]
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. (குறள்- 101)

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. —மு. வரதராசனார் உரை

[5] உரைகளின் படி: நூறு மடங்கு விளைவுகள் என்றால் அடுத்த 100 பிறவிகளுக்கு நீண்ட ஆயுளும், அழகும், மகிழ்ச்சியும், வலிமையும், அறிவும், கலங்கம் இல்லாத வாழ்க்கையும் இருக்கும் என்று பொருள்.

[6] உரைகளின் படி: இவையெல்லாம் சொல்வதற்கு இயலாத விளைவுகள் தரும் என்றாலும், படிப்படியாக மேலான விளைவுகள் கொண்டுள்ளவை. சிற்றாரும், பெரியாரும், கடலும் கொண்டுள்ள கணக்கில் அடங்கா (ஆனால் படிப்படியாக அதிகமான) நீரைப் போல.

[7] இதற்கு சமமான அன்பளிப்பு வேறு எதுவும் இல்லை. சங்கத்திற்கு என்று நினைத்து கொடுத்திருந்தால் இப்படிப்பட்ட அன்பளிப்பை தான் மகாபஜாபதி கோதமியார் தந்திருப்பார்.

[8] சீரழிந்து போகும் எதிர்காலங்களில் தங்கள் கழுத்தில் மஞ்சள் துணியை கட்டிக்கொண்டு மனைவி மக்களோடு வாழ்வோர், விவசாயமும் தொழிலும் செய்வோர், தங்களை பிக்கு சங்கத்தினர் என்று சொல்லிக் கொள்வார்கள்.

[9] இங்கே சங்கம் என்பது சீலத்துடன் வாழ்ந்த மறைந்த பிக்குணிமார்களும், பிக்குகளும் சேர்த்தது. இந்த எண்ணத்துடன் அன்பளிப்பு தரப்படும் போது (அதை பெறுபவர் ஒரு ஒழுக்கம் இல்லாத துறவியானாலும்) அதன் விளைவுகள் கணக்கிட முடியாது, அளவிட முடியாது என்கிறார் புத்தர்.

ஃஃஃ
தமிழில்: பா. இ. அரசு
Online version by Bhante Sujāto (different author)  https://suttacentral dot net/mn142

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்