Karajakāya sutta

 Feb 25, 2024


பாந்தே Sasanawanse

தொடர்ந்து மெத்தா பாவனை செய்வதன் நன்மைகளைப் பல சுத்த உதாரணங்களை கொண்டு பாந்தே விளக்கினார். அவற்றுள் சில...


ஃஃஃ


அங்குத்தர நிகாயம் AN10.219

Karajakāya sutta

வினை தோற்றுவித்த இந்த உடல் சுத்தம்

(சுருக்கம்)


பகவான் புத்தர் கூறுகிறார்:


"தீவினை செய்திருந்தால் அதன் பலனை அனுபவிக்காமல் துன்பத்தின் முடிவுக்கு வர முடியாது. அந்த வினைப் பயனை இந்த வாழ்க்கையில் அல்லது அடுத்த வாழ்க்கையில் அல்லது அதன் பின் தொடரும் வாழ்க்கைகளில் அனுபவிக்க நேரிடும்.


(அந்த தீவினைப் பலனைக் குறைப்பது எப்படி?)


ஒரு மேன்மையான சீடர் 

பேராசை இல்லாமல், 

பகைமை இல்லாமல், 

குழப்பம் இல்லாமல், 

தெளிவான மனதுடன் 

தம்முள்ளத்தில் அன்பு நிறைந்தவராக அந்த அன்பை ஒரு திசையில் பரப்புகிறார். பின் இரண்டாம், மூன்றாம், நான்காம் திசைகளில் பரப்புகிறார். அதே போல மேல் திசையிலும் கீழ் திசையிலும் உலகம் முழுவதற்கும் தன் அன்பை செலுத்துகிறார் - நிறைந்த, பரந்த வரையறையற்ற, பகைமையற்ற அன்பு அது.


அவர் இவ்வாறு அறிகிறார்: 'முன்பு எனது உள்ளம் அளவானதாக, வளர்க்கப்படாமல் இருந்தது. இப்போது அது அளவற்றதாகவும் நன்றாக வளர்க்கப்பட்டும் உள்ளது. நான் முன் செய்த தீயக்காரியங்கள் (அதனால் தோன்றும் வருத்தம்) இவ்வாறு வளர்க்கப்பட்ட உள்ளத்தில் நிலைத்து இருப்பதில்லை.'


தீவினையின் பலன்களை குறைப்பதற்காக புத்தர் கற்பித்து பல பரிகாரங்களுள் மெத்தா தியானமும் ஒன்று.


புத்தர் கேட்கிறார்:


"என்ன நினைக்கின்றீர்கள் துறவிகளே? ஒரு சிறுமி (அல்லது சிறுவன்) தனது இளம் பருவத்திலிருந்து அளவற்ற அன்பை பயின்று உள்ளத்தின் விடுதலையை வளர்ப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர் ஏதேனும் தீய காரியங்களை செய்வாரா?"


"மாட்டார், ஐயா."


"தீய காரியங்களை செய்யாத அவர் ஏதேனும் துன்பத்தை அனுபவிப்பாரா?"


"மாட்டார், ஐயா."


"எந்த தீயச் செயலும் செய்யாத அவருக்கு எங்கிருந்து வரும் துன்பம்?"


"அதேபோல பெண்களும் ஆண்களும் உள்ளத்தில் வரையறை இல்லாத அன்பை (மெத்தா/மைதிரி) வளர்த்து உள்ளத்தின் விடுதலையை பெற வேண்டும். "



மேலும் ஒருவர் கருணை (துன்புறுவோருக்கு அன்பு செலுத்துவது), முதிதை (மற்றவர் ஆனந்தத்தை கண்டு இன்புறுவது), உபேட்சை (மனசமநிலை) ஆகிய எண்ணங்களையும் எல்லா திசைகளிலும் பரப்புகிறார்....


இவை பிரமவிகாரபாவனை - மைத்திரி, கருணை, முதிதை, உபேட்சையென்னும் நான்கு பிரிவு கொண்ட பாவனை - என்று அழைக்கப்படும்.


இந்த தியானங்களை முழுமையாக வளர்த்துக் கொள்பவர் இம்மையில் ஞானம் பெறவில்லை என்றால் மறுமையில் பிரம்மலோகத்தில் பிறந்து அங்கேயே அருகர் நிலையை அடைவார்.


ஃஃஃ


சங்யுத்த நிகாயம் SN42.8

Sankhadhama Sutta 

சங்கு ஊதுபவர் (உவமை) சுத்தம்


மேற்கூறியபடி மெத்தா தியானத்தை செய்வதற்கு, இந்த சுத்தத்தில் பகவான் புத்தர் ஒரு உவமானத்தோடு விளக்கம் தருகிறார்.


ஒரு வலிமைமிகு சங்கு ஊதுபவர் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் சுலபமாக நான்கு திசைகளிலும் சங்கின் ஓசையை பரவச் செய்து விடுவார்.


அதேபோல எல்லா திசைகளிலும் மெத்தா, கருணை, முதிதை, உபேட்சையென்னும் நான்கு பிரம்மவிகார பாவனைகளையும் எளிதாக செய்து வளர்த்தவர் உள்ளத்தில் முன் செய்த தீவினையின் பாதிப்பு நிலைத்திருப்பதில்லை.


ஃஃஃ


மஜ்ஜிம நிகாயம் MN127

Anuruddha Sutta

அனுருத்தர் சுத்தம்


இந்த சுத்தத்தில் அனுருத்தர் 

நான்கு பிரம்மவிகார பாவனைகளையும் மேலே விவரித்த படி எல்லையில்லாமல் எல்லா திசைகளுக்கும் பரப்புவதை

"அப்பமாணா சேதோ விமுத்தி" (Appamānā cetovimutti) என்பதற்கு ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்.


பரிமாணம் = அளவு

அப்பமாணா = அளவற்ற immeasurable 

சேதோ = மனதின் mind

விமுத்தி = விடுபடுகை deliverance 


ஃஃஃ

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்